திருமூர்த்தி அணையில் இருந்து 3ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

உடுமலை, ஜன.12: திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், உடுமலை நகராட்சி உள்பட நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து பிஏபி பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஏற்கனவே, 2 மண்டலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில், 3ம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்று காலை திருமூர்த்தி அணையில் இருந்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் பிரதான கால்வாயில் தண்ணீரை திறந்துவிட்டார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் விஜயகார்த்திகேயன், முன்னாள் எம்.பி. மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, நடராஜன், கந்தசாமி, தலைமை செயற்பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் ராஜூ, பழனிவேல், உதவி செயற்பொறியாளர்கள் காஞ்சிதுரை, புவனேஸ்வரி, உதவி பொறியாளர்கள் சண்முகம், ஜெயக்குமார், செந்தில், தீனதயாளன், அ.தி.மு.க. நகர செயலாளர்  ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, புஷ்பராஜ், முரளி உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தற்போது, அணையில் 56 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. 573 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மொத்தம் 364 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இது குறித்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் வினாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 912 கனஅடியாக அதிகரிக்கப்படும். இதன்மூலம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் வட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் வட்டங்களில் 94,362 ஏக்கர் நிலம் பயனடையும். உரிய இடைவெளிவிட்டு ஐந்து சுற்றுகளாக மொத்தம் 9500 மில்லியன் கனஅடி திறந்துவிடப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கும் பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டது. விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார்.

Related Stories: