திருப்பூர், ஜன.12:திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் தனியார் கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, வெள்ளக்கோவில் பகுதியில் இருந்து லாரி மூலம் ஜல்லிகற்கள் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கொண்டு வரப்பட்டது. அனுப்பர்பாளையம்புதூர் அருகில் வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற இருசக்கரவாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் அருகில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் புகுந்து நின்றது. டிரைவர், கிளீனர் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். லாரி மோதியதில் இரு சக்கரவாகனத்தில் சென்ற தெய்வானை (75) சம்பவ இடத்தில் பலியானார். அவரது மகன் பழனிசாமி (53) காயங்களுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த விபத்தில் 4 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. அனுப்பர்பாளையம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் துரைசாமி (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.