பந்தலூர்,ஜன.12: பந்தலூர் அருகே கீழ்நாடுகாணி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தேயிலைத் தோட்டம் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பந்தலூர் அருகே கீழ் நாடுகாணி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தேயிலைத்தோட்டத்தில் 60 பெண்கள் உள்ளிட்ட 70 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு தீபாவளி போனஸ் மற்றும் கடந்த மாதம் ஊதியம் ஆகியவற்றை தோட்ட நிர்வாகம் வழங்காததாலும் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதாலும், தொடர் விடுமுறை என்பதால் கடந்த மாதம் சப்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி நேற்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து தொழிலாளர்களும் தேயிலைத்தோட்டம் அலுவலகம் முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தேவாலா டிஎஸ்பி அமிர்அகமது மற்றும் இன்ஸ்பெக்டர் திருஞானசம்மந்தம்,எஸ்ஐக்கள் ஜனார்த்தனன்,பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் சென்று தொழிலாளர்களை சமாதானம் செய்து இன்று தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்கும் வரை தொழிலாளர்கள் போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.