ஊட்டியில் காற்றுடன் சாரல் மழை

ஊட்டி,ஜன.12: ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நீலகிரியில் கடும் உறைபனி காணப்படும். குறிப்பாக, ஊட்டி, அப்பர்பவானி, அவலாஞ்சி, பைக்காரா, கிளன்மார்கன், தொட்டபெட்டா, தலைகுந்தா போன்ற பகுதிகளில் உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். டிசம்பர் முதல் ஜனவரி மாதம் முடியும் வரை நாள் தோறும் உறைபனி காணப்படும். அதேபோல், அடிக்கடி பனி மூட்டம் காணப்படும். இந்நிலையில், நேற்று காலை முதல் ஊட்டியில் லேசான காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால், கடும் குளிர் நிலவியது. படகு இல்லம், பைக்காரா போன்ற பகுதிகளில் படகு சவாரி சென்றவர்கள் கடும் குளிரால் அவதிக்குள்ளாகினர்.

அதேபோல், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா போன்ற பகுதிகளிலும் கடும் குளிர் நிலவியதால் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர். ஊட்டியில் நேற்று அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 9 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது. மேலும், புற நகர் பகுதிகளிலும் மழை மற்றும் மேக மூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: