ஊட்டி,ஜன.12: ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நீலகிரியில் கடும் உறைபனி காணப்படும். குறிப்பாக, ஊட்டி, அப்பர்பவானி, அவலாஞ்சி, பைக்காரா, கிளன்மார்கன், தொட்டபெட்டா, தலைகுந்தா போன்ற பகுதிகளில் உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். டிசம்பர் முதல் ஜனவரி மாதம் முடியும் வரை நாள் தோறும் உறைபனி காணப்படும். அதேபோல், அடிக்கடி பனி மூட்டம் காணப்படும். இந்நிலையில், நேற்று காலை முதல் ஊட்டியில் லேசான காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால், கடும் குளிர் நிலவியது. படகு இல்லம், பைக்காரா போன்ற பகுதிகளில் படகு சவாரி சென்றவர்கள் கடும் குளிரால் அவதிக்குள்ளாகினர்.