கோவை, ஜன. 12: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாநில சமநிலை வளர்ச்சி நிதி பணி முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் பொன்னையன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொன்னையன் கூறியதாவது: மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவால் மாநில சமநிலை வளர்ச்சி நிதி திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பின்தங்கிய பகுதியினை முன்னேற்றம் அடைய செய்வதற்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தனிநபர் வருமானம், வறுமை ஒழிப்பு, தொழில்துறை முன்னேற்றம் ஆகிய திட்டங்கள் குறித்த கருத்துருக்களை மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு அனுப்பி அக்குழுவின் நிதி உதவியோடு பல்வேறு திட்டங்களை திறம்பட செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் வால்பாறை, ஆனைமலை வட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் மாநில சமநிலை வளர்ச்சி நிதியின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.