பெண்ணிடம் 9 பவுன் பறிப்பு திருடன் முகம் கேமராவில் பதிவு

கோவை, ஜன:12  கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (50). மளிகைக்கடை வியாபாரி. இவர் மனைவி தனலட்சுமி (45). நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி தனது வீட்டிற்கு மாச்சம்பாளையம் ரோட்டில் நடந்து சென்றபோது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர் தனலட்சுமி அணிந்திருந்த 9 பவுன் தங்க நகையை பறித்து தப்பி சென்றனர். இவர்கள் குனியமுத்தூர் நோக்கி பைக்கில் சென்ற காட்சி ரோட்டோரம் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. திருடர்கள் நகையை பறித்தபோது தனலட்சுமி சிறிது தூரம் அவர்களை நோக்கி கூச்சலிட்டபடி ஓடினார். திருடிய நபரில் ஒருவரின் முகம் கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தது. ஒல்லியான தோற்றத்தில் இருந்த அந்த வாலிபர் தனலட்சுமியை அடிக்கடி திரும்பி பார்த்தபடி பைக்கில் சென்றார். போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவில் உள்ள வாலிபரை தேடி வருகின்றனர். சுந்தராபுரம் வட்டாரத்தில் கோலம் போட வரும் பெண்கள், மளிகை கடைக்கு செல்லும் பெண்களை நோட்டம் விட்டு நகை பறிப்பது தொடர்வதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: