கோவை, ஜன.12: கேரள மாநிலம் மலப்புரம் பூக்கோட்டூரை சேர்ந்தவர் அப்துல் சலாம் (50). ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது கார் டிரைவர் சம்சுதீன் (45). இவர்கள் கடந்த மாதம் 25ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பாலக்காடு மெயின் ரோடு நவக்கரை நந்தி கோயில் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது 5 ேபர் கும்பல் வழிமறித்தது. கத்தியை காட்டி அந்த கும்பல் அப்துல் சலாமிடம் 27 லட்ச ரூபாயை பறித்து தப்பியது. அந்த கார் சிறுவாணி ரோட்டில் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் கோவை சுகுணாபுரத்தை சேர்ந்த உண்ணிகுமார் (44), பாலக்காட்டை சேர்ந்த சந்தீப் (37), திருச்சூர் சுபின் (29), ஸ்ரீஜித் (27), ராதாகிருஷ்ணன் (47) ஆகியோரை மதுக்கரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் சந்தீப், சுபின் ஹவாலா பணம் கடத்துவதில் கில்லாடிகள் என்பதும், கேரளாவில் இவர்கள் மீது வழக்கு இருப்பதும் தெரியவந்தது.
இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ‘‘பெங்களூரில் இருந்து குறிப்பிட்ட பதிவு எண் காரில் ஹவாலா பணம் இரவில் கடத்தி வரும் தகவல் கிடைத்தது. 25ம் தேதி கார் வந்தது. நாங்கள் எங்கள் வாகனத்தை அந்த வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினோம். இரும்பு ராடுடன் அப்துல் சலாம், சம்சுதினை தாக்கி காரை கடத்தினோம். காரில் 27 லட்சம் இருந்தது. பணத்தை எடுக்க முடியவில்லை. மாட்டி கொள்வோம் என நினைத்து தப்பினோம். போலீசார் எங்களை பிடித்து விட்டார்கள். எங்கள் குழுவில் மேலும் சிலர் இருக்கிறார்கள். ஹவாலா பணம் கடத்தும் டிரான்ஸ்போர்ட்டருக்கு 10 சதவீத தொகை கமிஷன். நாங்கள் டிரான்ஸ்போர்ட்டர், ஏஜன்டிடம் பேசி தகவல் வாங்கி, ஹவாலா பணம் வாகனங்களை மடக்கி ெகாள்ளையடிப்போம். போலீசுக்கு தெரியாமல் பல கோடி ரூபாய் கடத்தப்படுகிறது. பல ஆண்டாக இது நடக்கிறது’’ என்று கூறியுள்ளனர்.