மேட்டூர், ஜன.11: வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு, மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சங்கங்களை அகில இந்தில அளவில் தேர்வு செய்து, இந்திய அரசின் வங்கிகள் கூட்டமைப்பு சுபாஷ் யாதவ் விருதை வழங்கி வருகிறது. கடந்த 2018- 2019ம் ஆண்டுக்கான விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் தேர்வானது. உறுப்பினர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் மற்றும் தவணை தவறாமல் கடன் வசூலித்தல், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு சிறந்த முறையில் கடனுதவி வழங்கல், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கடனுதவி வழங்கி அவர்களை பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய செய்தது உள்பட 32வகையான சேவைகளுக்காக அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்தது.