நாமக்கல், ஜன.11: நாமக்கல் அருகே நள்ளிரவு, ₹1 லட்சம் துணியுடன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவை, மர்ம நபர்கள் கடத்திசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் அருகேயுள்ள வேலகவுண்டம்பட்டி கொங்கு நகரை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (43). இவர் நேற்று முன்தினம், கரூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் இருந்து, தனது சரக்கு ஆட்டோவில் துணிகளை ஏற்றி வந்துள்ளார். இரவு ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலை வீட்டைவிட்டு வெளியே வந்துபோது, அங்கிருந்த சரக்கு ஆட்டோவை காணவில்லை. ₹1 லட்சம் மதிப்புள்ள துணிகளுடன் ஆட்டோ மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ரமேஷ் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, நள்ளிரவில் ₹1 லட்சம் மதிப்பிலான துணிகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட சரக்கு ஆட்டோவை தேடி வருகின்றனர்.