நாமக்கல், ஜன.11: பொங்கல் பரிசு தொகுப்புடன் பாசிப்பருப்பு வழங்கப்படவில்லை என மக்கள் கிராம சபைக்கூட்டத்தில், பெண்கள் சரமாரி புகார் தெரிவித்தனர். நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி, அர்த்தனாரிப்பள்ளி தெரு, லத்துவாடி ஆகிய இடங்களில், திமுக சார்பில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு நகர பொறுப்பாளர் ராணா.ஆனந்த் தலைமை வகித்தார். இதில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கலந்து கொண்டு பேசியதாவது: தற்போதைய அதிமுக ஆட்சியில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. திமுக ஆட்சி அமைந்ததும், இத்திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் தலைவர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். மக்கள் விரோத அதிமுக அரசுக்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டனர். நான் பங்கேற்ற 50 கிராமசபை கூட்டங்களிலும், அதிமுக ஆட்சி மீது, பெண்கள் பல்வேறு புகார்களை தெரிவிக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட, வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ராஜேஸ்குமார் தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட துணைச்செயலாளர் ராமலிங்கம், மாநில மகளிர் தொண்டரணி இணை செயலாளர் ராணி, மணிமாறன், நக்கீரன், நவலடி, ராஜகோபால், மூர்த்தி, ஈஸ்வரன், புவனேஸ்வரன், சரோஜா, அறிவழகன், மோகன்ராஜ், இளம்பரிதி, கடல்அரசன் கார்த்திக், வேலுபாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அடுத்த ஊனந்தாங்கல் ஊராட்சியில், ஒன்றிய செயலாளர் ராமசுவாமி தலைமையில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு பேசுகையில், ‘அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் பாசிப்பருப்பு இல்லை. பொங்கல் வைக்க தேவையான குண்டுவெல்லத்துக்கு பதில் சர்க்கரை என தரமற்ற பொருட்களை வழங்கி மக்களை ஏமாற்றியுள்ளனர். மேலும் 70 சதவீதம் பேருக்கு மட்டும் விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்பட்டுள்ளது,’ என்றார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், ராசிபுரம் நகராட்சி 23 மற்றும் 24வது வார்டுகளில், நகர செயலாளர் சங்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் பங்கேற்று பேசினார்.