திருமயம், ஜன.11: திருமயம் ஊராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் திருமயம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், திருமயத்தை சுற்றியுள்ள சுமார் 50 கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதி, அத்தியாவசிய பொருட்கள் வாங்க முக்கிய வணிக வளாகம் உள்ள ஊராக உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, கோர்ட் வளாகம், அரசு பள்ளிக்கூடங்கள் உள்ளதால் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருமயம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருமயம் ஊராட்சியில் உள்ள வீடுகள், கடைவீதி, அரசு அலுவலகங்களில் தேங்கும் குப்பைகளை திருமயத்தில் இருந்து காரைக்குடி செல்லும் சாலை ஓரம் திறந்தவெளி குப்பை கிடங்கில் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இங்கு போதுமான இடவசதி இல்லாததால் தினந்தோறும் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை கொட்ட இடமில்லாமல் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை தீவைத்து அழிக்கப்பட்டு வந்தது.