கலெக்டர் தலைமையில் கூட்டம் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், ஜன.11: பெரம்பலூர் மாவட்டம் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற 15.2.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார். ‘பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் (சென்ட்ரல் யுனிவர்சிட்டி) பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ,மாணவிகள் 2020-2021ம் ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ,மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2லட்சம் வரை முதற்கட்டமாக 100 மாணவ, மாணவியர்களுக்கு 2019-20ம் கல்வி ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளாக இருத்தல் வேண்டும். பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான புதியது (fresh) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களையோ அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.perambalur.nic.in < //www.perambalur.nic.in/ > என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் மேற்படி கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 15.2.2021க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28551462 என்ற தொலைபேசி எண்ணிலோ, tngovtiitscholarship@gmail.com < mailto:tngovtiitscholarship@gmail.com > என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Related Stories: