அயனாவரத்தில் 200 கிலோ ஜர்தா பறிமுதல்: வாலிபர் கைது

பெரம்பூர், ஜன.11: அயனாவரம் தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் மாவா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்கப்படுவதாக தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் மதியம் மேடவாக்கம் டேங்க் ரோடு பகுதியில் உள்ள டீக்கடை அருகே உதவி ஆய்வாளர் மீனா உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்தனர். அதில் ஜர்தா இருந்தது. விசாரணையில் புளியந்தோப்பை சேர்ந்த கவியரசு(26). அயனாவரம் பகுதியில் குடோன் வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அயனாவரம் பழனியப்பா முதல்தெரு பகுதிக்கு சென்ற போலீசார் அந்த குடோனில் சோதனை செய்தபோது அதில் 200 கிலோ ஜர்தா இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து கவியரசை கைது செய்தனர். மேலும் அயனாவரத்தை சேர்ந்த சுனில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: