தமிழகத்தில் முதுநிலை படிப்புகளில் சேர டான்செட் தேர்வுக்கு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜன.8: தமிழகத்தில் முதுநிலை படிப்புகளில் சேர டான்செட் தேர்வுக்கு வரும் 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் டான்செட் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 20ம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 21ம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளன. எம்சிஏ படிப்புக்கு காலை 10 முதல் 12 மணி வரையும் எம்பிஏ படிப்புக்கு மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு வரும் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 12ம் தேதி வரை www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் இறுதி நிலையை பிப்ரவரி 17ம்தேதி அறிந்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ₹600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: