நாகர்கோவிலில் துணிகரம் ஆசிரியையை தாக்கி செயின் பறிப்பு

நாகர்கோவில், ஜன. 8: நாகர்கோவிலில் நேற்று காலை நடந்து சென்ற ஆசிரியையிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர்.    நாகர்கோவில் நேசவாளர்காலணி பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார். இவரது மனைவி சேம் பிளாரன்ஸ்(53). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் பெங்களூருவில் உள்ளார். சகோதரனின் மகனுக்கு பெங்களூருவில் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் சேம்பிளாரன்ஸ் கலந்துகொண்டார். பின்னர் அவர் பஸ் மூலம் நேற்று காலை வடசேரி பஸ் நிலையம் வந்தார்.  அங்கிருந்து பஸ்பிடித்து பால்  பண்ணை பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார்.   அப்போது பைக்கில் வந்த 2 பேர் சேம்பிளாரன்சை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்து இருந்த நான்கரை பவுன் செயினை பறித்துச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சேம்பிளாரன்ஸ் சத்தம் போடவே அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர். இது குறித்து நேசமணிநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பைக்கில் வந்த 2 பேர் ஹெல்மெட் அணியவில்லை என சேம்பிளாரன்ஸ் தெரிவித்தார். மேலும் அந்த பகுதி வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் சோதனை செய்தனர்.

Related Stories: