புதுச்சேரி, ஜன. 7: காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் முற்றுகை அறிவித்துள்ள நிலையில் கவர்னர் மாளிகைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக ஆளுங்கட்சி அறிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் நாராயணசாமி வீட்ைட முற்றுகையிடுவோம் என பாஜகவினர் அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ், பாஜக போட்டி போராட்டம் காரணமாக உஷாரான மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில் நாளை (8ம்தேதி) சட்டசபையை முற்றுகையிட காங்கிரஸ், கூட்டணி கட்சிகள், தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன. இதை உளவுத்துறை கவர்னர் மாளிகைக்கு தெரிவித்துவிட்ட நிலையில் கவர்னர் மாளிகைக்கு 3 அடுக்கு பாதுகாப்புக்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது பாரதியார் சிலை அருகிலும் புதிதாக பேரிகார்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் யாரும் நுழையாத வண்ணம் ராஜ்நிவாஸ் செல்லும் மற்ற சாலைகளையும் ேபாலீசார் கெடுபிடியாக அடைத்து வருகின்றனர். 8 அடி உயரத்துக்கு தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. இதனால் அரசு பொது மருத்துவமனை, கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இதேபோல் சட்டசபை செயலகம், முதல்வர் நாராயணசாமி வீட்டை சுற்றிலும் பாதுகாப்பை அதிகரிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தின் வேண்டுகோளை ஏற்று பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு 3 கம்பெனி படையினர் புதுச்சேரி வந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுவோரை முன்கூட்டியே கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்பதால் அரசியல் கட்சி நிர்வாகிகள் உஷாராகி உள்ளனர்.