×

நீதிமன்றத்தில் பணி போலி நியமன ஆணை கொடுத்து ₹6.17 லட்சம் மோசடி பட்டதாரிகள் 2 பேர் கைது

கடலூர், ஜன. 6: கடலூரில் நீதிமன்றத்தில் பணியாற்றுவதற்கான போலி நியமன ஆணை வழங்கி ரூ. 6.17 லட்சம் மோசடி செய்த பட்டதாரிகளை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பெரிய சோழவள்ளியை சேர்ந்தவர் சத்தியதாஸ் (26), பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடலூர் மாவட்ட எஸ்பி அபினவ்விடம் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
பெயிண்டர் ஆக பணியாற்றி வருகிறேன். கடலூர் செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சத்யராஜ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் தனக்கு நீதிபதிகள் மத்தியில் நல்ல நட்பு இருப்பதாகவும், இதன் மூலம் நீதிமன்றத்தில் பணியாற்ற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி அதில் பணி பெற்றுத் தருவதாக தெரிவித்தார். இதற்காக ரூ.6.17 லட்சம் பெற்றுக்கொண்டார். பின்னர் நீதிமன்ற பணிக்கான பணி நியமன ஆணை வழங்கினார் . ஆனால் உடனே ஊட்டி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அங்கு செல்ல வேண்டும் என கூறி அழைத்துச் சென்றார். ஆனால் ஊட்டியில் விடுதியில் சில நாட்கள் தங்க வைத்து விட்டு இதைத்தொடர்ந்து சிதம்பரத்துக்கு மீண்டும் பணிமாற்றம் செய்ததற்கான ஆணை பெற்றுள்ளேன் என தெரிவித்தார்.
இதனால் சந்தேகமடைந்த நிலையில் விசாரித்தபோது சத்யராஜ் ஏமாற்றுவது தெரியவந்தது. எனவே போலி பணி நியமன ஆணை வழங்கிய சத்யராஜ் மீது நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க எஸ்பி அபினவ் உத்தரவிட்டார்.

குற்றப்பிரிவு டிஎஸ்பி கனகேசன், இன்ஸ்பெக்டர் துர்கா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சத்யராஜ் ஏமாற்றியது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் சத்யராஜ் எம்பிஏ பட்டதாரி என்பதும், அவரது நண்பர் கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த எம்பில் பட்டதாரி செந்தில்குமாருடன் சேர்ந்து போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

செந்தில்குமார் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் நிலையில் அங்கு போலி பணி நியமன ஆணை தயார் செய்து ஏமாற்றி உள்ளது கண்டு
பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்டதாரிகள் சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் செந்தில்குமார் ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி