காளையார்கோவில்: சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் நேற்று பங்கேற்ற முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:
மக்கள் நலனுக்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை கட்சி தொண்டர்களிடம் தான் உள்ளது. கடந்த காலத்தை புரட்டிப் பார்த்தால், மாஜி அமைச்சர் உதயகுமார் பற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அதிமுக இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணமே அவர்தான். கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல், ஆறுதல் தெரிவிப்பதற்காக அவர்கள் குடும்பத்தினரை விஜய் சென்னைக்கு வரவழைத்ததை நான் வரவேற்கிறேன், நல்ல விஷயம் தான். விஜய்யுடன் கூட்டணியா என்று கேட்கிறீர்கள். எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பதில் சூறாவளி, புயல் அடிக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக, தமிழக மக்கள் நலன் கருதி அதிமுக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நல்ல முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பிரிந்து கிடப்பதால், 2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவே பொதுமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
