காட்டுமன்னார்கோவில், டிச. 29: காட்டுமன்னார்கோவில் அருகே முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து 4 பேரை வெட்டி, பொருட்களை சூறையாடிய சம்பவத்தில் பாஜக பிரமுகர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னாகோவில் அடுத்த ஷண்டன் செல்லியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன்(56). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கசாமி என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே இடம் சம்பந்தமாக கடந்த ஒரு வருடங்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கசாமி மகளும், பாலமுருகன் மனைவியுமான திலகவதி(23) என்பவர் மகளிர் குழுவில் ஊக்குநராக இருந்து வருகிறார். இவர் காட்டுமன்னார்கோவிலில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று குழு உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ளார். அதனை வசூல் செய்பவரும் அவரே. இப்படியிருக்க விஸ்வநாதனின் உறவினரான மணிகண்டன் மனைவி ஷோபனா(28) அதே குழுவில் கடன் பெற்றுள்ளார். இந்த மாதம் கடன் தவணை கட்ட காலதாமதம் செய்ததால் திலகவதியின் தந்தை தங்கசாமிக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.