காரைக்காலில் முதியவர் பலி: கொரோனா பாதிப்பு 38 ஆயிரத்தை நெருங்கியது

புதுச்சேரி, டிச. 28: புதுச்சேரியில் நேற்று புதிதாக 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைக்காலில் முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 2,984 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 34, காரைக்கால்- 5, ஏனாம்- 3, மாகே- 6 என மொத்தம் 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் காரைக்காலில் முதியவர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 631 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.66 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37,995 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 157 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 202 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 359 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று 43 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37,005ஆக (97.39 சதவீதம்) உள்ளது. இதுவரை 4,73,586 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 4,31,289 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது, என்றார்.

Related Stories: