×

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் திமுக தலைவர் சேலம் வருவது நமக்கு பெருமை பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி அறிக்கை

சேலம், டிச.4: சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளை நசுக்குகின்ற வகையில், விவசாய விரோத சட்டங்களை, மோடி அரசு இயற்றியதால் விவசாய நாடான இந்தியாவில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி சர்க்காரின் தலைநகரம் விவசாயிகளால் முற்றுகையிடப் பட்டுள்ளது. இந்த விவசாய விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என இந்தியாவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருக்கிறது. விவசாயத்திற்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற கூடாது என தமிழகத்தை சேர்ந்த திமுக கூட்டணி கட்சியின் 39 எம்பிக்களும் சேர்ந்து, மோடிக்கு எதிராக குரல் கொடுத்தனர். சட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர். ஆனால், அதிமுக எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மத்திய மோடி அரசையும், அதிமுக அரசையும் கண்டித்தும், சேலத்தில் நடக்கும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள சேலம் வருவது நமக்கு பெருமையாகும். சேலம் உடையாப்பட்டி அருகேயுள்ள கந்தாஸ்ரமம் எஸ்.ஆர்.பி. கிரிக்கெட் மைதானத்தில், நாளை(5ம்தேதி) நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார். எனவே, சேலம் மேற்கு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், உடன்பிறப்புக்கள், குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்த கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டி.எம்.செல்வகணபதி கூறியுள்ளார்.


Tags : DM Selvaganapathy ,DMK ,Salem ,
× RELATED தமிழ்நாட்டு மக்கள் மதித்தால்...