பரமக்குடி, டிச.4: ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களின் விவசாயத்திற்காக வைகை அணையிலிருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி கடந்த 30ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்தது. அங்கிருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்காக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்எல்ஏ, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டனர்.
தண்ணீரை விவசாயிகளும், பொதுமக்களும் மலர் தூவி வரவேற்றனர். தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயை நோக்கி பாய்ந்து சென்றது. பின்பு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், ‘‘முதல்வர் உத்தரவின்படி ராமநாதபுரம்,சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்த தண்ணீரை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் 67 ஆயிரத்து 838 ஏக்கர் பாசன பரப்பு நிலங்கள் பயன்பெறும் என்றார்.