திருப்பூர்,டிச.4: மூலப்பொருட்கள் விலை உயர்வால், பாலிபேக் விலையை 25 சதவீதம் உயர்த்தி, பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், 150 பாலிபேக் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன. கடந்த மே முதல், பாலி புரொப்லின், பாலி எத்திலீன் விலை உயர்ந்து வருகிறது. மூலப்பொருள் உயர்வால், பாலிபேக் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. விலை உயர்வை சமாளிப்பது குறித்து முடிவு செய்வதற்காக, திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க (டிப்மா) நிர்வாக குழு கூட்டம், திருப்பூர் ராம்நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது.
சங்க தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் லோகநாதன், பொருளாளர் செல்வம் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பாலிபேக் உற்பத்தி மூலப்பொருட்களான பாலி புரொப்லின், பாலி எத்திலீன் விலை கடந்த மே மாதம் முதல் படிப்படியாக உயர்ந்து தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. 30 சதவீதத்துக்கு மேல் மூலப்பொருள் விலை உயர்ந்துள்ளதால், திருப்பூர் பாலிபேக் உற்பத்தி நிறுவனங்களின், செலவினம் பல மடங்கு அதிகரித்துள்ளது. நெருக்கடியான இந்த சூழலை எதிர்கொள்ளும் வகையில், பாலிபேக் விலை 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு, டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. திருப்பூர் உள்நாடு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜாப்ஒர்க் நிறுவனங்கள், இந்த விலை உயர்வுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.