×

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற காலக்கெடு நீட்டிப்பு

ஊட்டி,டிச.4:  நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது, மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ெஜயின் மதத்தை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 2020-21ம் கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு உதவித்தொகையும், 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ., ஐடிசி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் 2020-21ல் விண்ணப்பிக்க மதிப்பெண் வரையறை தளர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே வருமான வரம்பிற்குட்பட்ட அனைத்து சிறுபான்மையின மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கோத்தகிரி பழங்குடியின கிராமத்தில்...