வடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

நெய்வேலி, டிச. 4: வடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.  கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் பின்புறம்  வடலூர் பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. மேலும் சார் பதிவாளர் அலுவலகத்தை இடைதரகர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்தாகவும்,  பொதுமக்கள் கொண்டு செல்லும் ஆவணங்கள் இடைதரகர்கள மூலம் வந்தால் மட்டுமே பதிவு செய்து தருவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறு வேடத்தில் சார் பதிவாளர் அலுவலத்தை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கடலூர் லஞ்ச ஒழிப்பு  காவல் துணை கண்காணிப்பாளர் மெல்வின் ராஜா சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்முகம், மாலா மற்றும்  போலீசார்  பதிவாளர் அலுவலகத்திற்கு உள்ளே சென்றனர். அப்போது பணியில் இருந்த வடலூர் சார்பதிவாளர் ரங்கராஜ் மற்றும் ஊழியர்களை வெளியே விடாமல் அலுவலகத்தை மூடி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.62 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.மேலும்   அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களையும் விசாரணைக்காக எடுத்துச்சென்றனர்.  சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனை வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: