மாஞ்சோலை மலைப்பகுதி கண்காணிப்பு சிறப்பு அதிகாரி கருணாகரன் தகவல்

நெல்லை, டிச. 4: புயல் எச்சரிக்கை எதிரொலியாக நெல்லை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் கருணாகரன், கலெக்டர் விஷ்ணுவுடன் நேற்று தாமிரபரணி ஆறு மற்றும் கால்வாய் பகுதிகளில் 2வது நாளாக ஆய்வு நடத்தினார். அப்போது சிறப்பு அதிகாரி கருணாகரன் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் இல்லை. பாபநாசம் அணையில் 80 சதவீதம் தண்ணீரும், மணிமுததாறு அணையில் 60 சதவீதம் தண்ணீரும் இருப்பு உள்ளது. இதற்கு மேல் மழை பெய்தால் இரண்டு அணைகளும் நிரப்பப்பட்டு உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படும். மாஞ்சோலை மலைப்பகுதிக்கு தனி குழு அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு மழை, வெள்ளம் அதிகம் இருந்தால் உடனடியாக அனுப்பும் வகையில் அம்பையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: