வி.கே.புரம். டிச. 4: புரேவி புயல் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று மத்திய அரசு எச்சரித்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தாமிரபரணியில் இரு நாட்கள் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் போலீசார் கயிறு கட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குளிக்க தடை விதித்திருப்பது தெரியாமல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பாபநாசம் தாமிரபரணிக்கு வந்தனர். ஆனால் அவர்களை போலீசார் குளிக்க அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். பரிகார பூஜைக்கு வந்தவர்களும் பூஜை முடிந்தவுடன் குளிக்க முடியாமல் பூஜை நடத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வி.கே.புரம் நகராட்சி சார்பாக ஒலி பெருக்கி மூலம் ஆற்றின் கரையோரத்தில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதேபோல காரையாறு சொரிமுத்தய்யனார் கோயிலுக்குச் செல்வதற்கும் வனத்துறை தடை விதித்து பாபநாசம் வனச்சோதனை சாவடி மூடப்பட்டது. இதனால் சொரிமுத்தய்யனார் கோயிலுக்கு வந்த பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.