×

21ம் தேதி முதல் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணியை வரும் 21ம் தேதி முதல் தொடங்குவார்கள் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை: இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1ல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. 2023ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொடர் திருத்தக் காலம், 2023 (காலாண்டு 3)-ன் வாக்காளர் பட்டியல் கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்ட தொடர் திருத்தக் காலம், 2023 (காலாண்டு 3)ன்போது வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களாக 1,39,108 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன மற்றும் 27,332 வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்துள்ளனர்.

3,42,185 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும், 1,04,141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் திருத்தக் காலம், 2023 (காலாண்டு 3)-ன் 2023ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,10,39,316 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,00,29,237, பெண் வாக்காளர்கள் 3,10,02,098 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,981 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாரல் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி வரும் 21ம் தேதி முதல் தொடங்கப்பெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 21ம் தேதி முதல் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,CHENNAI ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..!