×

13 மணி நேர சோதனைக்கு பின் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் பொன்முடி: 11 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை

சென்னை: கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணிக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள் என 9 இடங்களில் சோதனை நடத்தினர். பின்னர் அவர், அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி உள்ளார். இவர், கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011 மே மாதம் வரை கனிமவளத்துறை அமைச்சராக பதவியில் இருந்தார்.

அவரது பணிக்காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் அளவுக்கு மீறி செம்மண் வெட்டி எடுத்ததாக, அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வேண்டுமென்றே செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி எம்பி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. கடந்த 2011ம் ஆண்டு இறுதியில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த வழக்கில், அதுவும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்ட வழக்கில் வேண்டுமென்றே சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீடு, விழுப்புரம் புதுச்சேரி சாலை, கிழக்கு சண்முகபுரத்தில் உள்ள வீடு, பொன்முடி மகன் கவுதம் சிகாமணியின் வீடு, அவரது உதவியாளர்கள் வீடு, விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரி, விழுப்புரம் ரங்கநாதன் வீதியில் அமைச்சருக்கு சொந்தமான கயல் பொன்னி நிறுவனம், சென்னை கே.கே.நகரில் உள்ள கவுதம் சிகாமணியின் உறவினர் நடத்தும் தனியார் மருத்துவமனை என 9 இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை ஒரே நேரத்தில், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக சென்று சோதனை நடத்தினர்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை என்ற தகவல் அறிந்ததும், சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடுகள் முன்பு திமுகவினர் குவிந்தனர். இதையடுத்து சோதனை நடக்கும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. குறிப்பாக, சென்னை சைதாப்பேட்டை நகர் காலனியில் உள்ள வீட்டில் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றிய பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்தார். அப்போது பொன்முடி பயன்படுத்தும் கார் மற்றும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் என மொத்தம் 3 கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அமைச்சர் பொன்முடி பயன்படுத்திய காரில் இருந்து அவரது டைரியை அதிகாரிகள் எடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல், கள்ளக்குறிச்சி எம்.பி.யாக உள்ள பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணியின் வீட்டிலும் சோதனை நடத்தினர். விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் திருப்பனாழ்வார் தெருவில் அமைந்துள்ள பொன்முடியின் பூர்வீக வீட்டில் சோதனை நடத்த 7 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 2 காரில் வந்தனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்ததால் அதிகாரிகள் வீட்டின் முன்பு சிறிது நேரம் காத்திருந்தனர்.

அதன்பிறகு தன் வீட்டு பணியாளர் செல்வத்தை தொடர்பு கொண்ட அமைச்சர் பொன்முடி, கதவை திறந்து அமலாக்கத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அதன் பிறகு 7 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதகாரிகள் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனையின் போது, வீட்டில் உள்ள 2 பீரோக்களை திறக்க முடியவில்லை. அதற்கான சாவி சென்னையில் உள்ள அமைச்சர் வீட்டில் உள்ளது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சாவியை சென்னையில் இருந்து கொண்டு வர நேரம் ஆகும் என்பதால், விழுப்புரத்தில் சாலையோரம் பூட்டு ரிப்பேர் செய்யும் ஊழியர் ஒருவரை அழைத்து வந்தனர். அவர் மூலம் ஒரு பீரோ திறக்கப்பட்டது.

மற்றொரு பீரோவை திறக்க முடியவில்லை. அதைதொடர்ந்து மற்றொரு பீரோவையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழில்நுட்ப ஊழியர்களை வரவழைத்து திறந்து சோதனை செய்தனர். சென்னையில் உள்ள பொன்முடி வீட்டில் நடந்த சோதனையில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பிரிட்டன் நாட்டின் பவுண்டு, அமெரிக்கா நாட்டின் டாலர் என மொத்தம் ரூ.70 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சோதனையின் இடையே இந்தியன் வங்கியில் இருந்து 2 ஊழியர்களை வரவழைத்து கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி உரிய விளக்கம் அளித்தார். பின்னர் இரவு 8 மணியளவில் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 11 ஆண்டுகள் கழித்து தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தியதோடு அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது, திட்டமிட்டு ஒன்றிய அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

The post 13 மணி நேர சோதனைக்கு பின் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் பொன்முடி: 11 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ponmudi ,Enforcement Directorate ,Chennai ,Jayalalithaa ,Enforcement Department ,Minister ,Dinakaran ,
× RELATED சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா...