உத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி

உத்திரமேரூர், மார்ச் 20: கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சோக சம்பவத்தால், உத்திரமேரூர் அருகே பரபரப்பு ஏற்பட்டது. உத்திரமேரூர் அடுத்த ஆர்என் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். டிரைவர். இவரது மனைவி யசோதா. பெருநகர் கிராமத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் வேலை செய்கிறார். இவர்களுக்கு 6 வயதில் மகளும், ஜாக்சன் கிறிஸ்டோபர் (3)  என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மருத்துவமனைக்கு வேலைக்கு சென்ற யசோதா, தனது 2 குழந்தைகளையும் அழைத்து சென்றார். இருவரும் மருத்துவமனையின் பின்புறம் உள்ள வயல்வெளியில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கிணற்றின் அருகே சென்றபோது சிறுவன் ஜாக்சன் கிறிஸ்டோபர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றில் விழுந்தான். இதை பார்த்த மகள், அலறி கூச்சலிட்டாள்.

சிறுமியின் சத்தம் கேட்டு யசோதா அங்கு சென்றார். அதற்குள், குழந்தை தண்ணீரில் மூழ்கியது. இதை பார்த்து யசோதா கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். தகவலறிந்து உத்தரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, 3 மணிநேர போராட்டத்துக்கு பின், குழந்தையை சடலமாக மீட்டனர். இதையடுத்து பெருநகர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: