திருவள்ளூர், மார்ச் 20: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும் 31ம் தேதி வரை டாஸ்மாக் பார்களை மூட அரசு உத்தரவிட்டும், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், டாஸ்மாக் கடை அருகே உள்ள பார்களில் முழு நேரமும் ‘சரக்கு’ விற்பனை அமோகமாக நடக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளூர் மற்றும் மதுவிலக்கு போலீசார் வருமானம் கருதி வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் வரும் 31ம் தேதி வரையில் டாஸ்மாக் மதுபான பார்களை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் காலை நேரத்திலேயே போதையில் மிதக்கும் ஆசாமிகள், ‘சரக்கு’ தேடி அலைகின்றனர். இதை பயன்படுத்தி, டாஸ்மாக் கடை அருகே ‘பார்’ ஊழியர்கள் கடை மூடியிருக்கும் நேரத்தில் மதுவிற்பனையை துவங்குகின்றனர். தேவைகேற்ப மது வகைகளை பெட்டியுடன், ‘பார்’களில் பதுக்கி வைத்து, இரு மடங்கு விலையில் விற்பனை செய்கின்றனர். கடை மூடியிருக்கும் நேரத்தில், பார்களில் அதிக விலைக்கு சரக்கு வாங்குவோருக்கு டம்ளர், தண்ணீர் இலவசமாக வழங்குகின்றனர்.