திருவள்ளுர், மார்ச் 20: ரஷ்யா நாட்டில் இருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு வந்திறங்கிய 13 இஸ்லாமியர்களுக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என மருத்துவக் குழுவினர் சோதனை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள் மூலம் தமிழகத்திற்கும், இங்கிருந்து பிற மாநிலங்களுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிப்பதை கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் நிலையங்களிலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும், ரயில் பெட்டிகளையும் தொடர்ந்து கிருமிநாசினி மூலம் தினந்தோறும் ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.