வளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்

பூந்தமல்லி, மார்ச் 20: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டு இயங்கும் கடைகளுக்கு தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதையும் மீறி தொழில் வரி மற்றும் உரிமம் பெறாமல் இயங்கும் கடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொழில் உரிமம் பெறாத 60க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்னர். இந்நிலையில், வளசரவாக்கம் 11வது மண்டலத்திற்கு உட்பட்ட போரூர், ராமாபுரம், வளசரவாக்கம் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது செல்போன், மளிகை கடை, ஹார்டுவேர்ஸ், ஓட்டல் உள்ளிட்ட 7 கடைகள் தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மேற்கண்ட 7 கடைகளுக்கும் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். தொழில்வரி மற்றும் உரிமம் பெற்ற பின்னரே இந்த கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: