தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி

தூத்துக்குடி, மார்ச் 20:  திமுக பாராளுமன்ற குழு துணைத்தலைவரும், மகளிர் அணி மாநில செயலாளருமான  கனிமொழி எம்.பி., மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது தொகுதியான தூத்துக்குடியில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் கோரிக்கையான, தூத்துக்குடியில் மத்திய அரசுப் பாடத்திட்ட பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என்பதை  தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். எனது தொகுதியில் சுங்கத்துறை, நெய்வேலி அனல் மின் கழகம், மத்திய தொழில் பாதுகாப்புப் படை,  கடலோர காவல்படை, சிர்கோனியம் காம்ப்ளக்ஸ், அணுமின் கழகத்துக்கு உட்பட்ட கனநீர் ஆலை (ஹெவி வாட்டர் பிளான்ட்), துறைமுகம் என பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.

இந்நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்கத் தயாராக இருக்கிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் கேந்திரிய வித்யாலயா சங்கேதனுக்கு எழுதிய கடிதத்தில், தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான  நிலம், உள்கட்டமைப்பு வசதிகள் ரீதியாக தாங்கள் உதவத் தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்திருக்கிறது.

எனவே தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பது குறித்து விரைவில் பரிசீலித்து நல்ல முடிவெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: