தூத்துக்குடி, மார்ச் 20: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில் தற்காலிக பழைய பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமாக நடந்துவருகின்றன. உள்ளாட்சி துறை, சுகாதாரத் துறை மற்றும் அரசின் பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து இதற்கான பணிகளை அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளன. இதே போல் தூத்துக்குடி மாநகராட்சி தற்காலிக பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சி மூலம் பஸ்கள், சிற்றுந்துகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும், கொரோனா தொற்று ஏற்படாத வகையில் வைக்கப்பட்டுள்ள கை கழுவுமிடத்தில் பொதுமக்கள் கை கழுவுவதல், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தமிழக முதல்வர் உத்தரவுபடி, மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், பயிற்சி கூடங்கள், பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தையும் தற்காலிகமாக மூடவும் தெரிவித்துள்ளார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் பொது மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கலெக்டர் அலுவலக நுழைவாயில் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் கை கழுவுமிடம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பணியாளர்களை நியமித்து கை கழுவும் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தெர்மல் ஸ்கேனர் மூலம் கலெக்டர் அலுவலக வளாகம், மற்றும் பொதுமக்கள் அதிகமாக வரும் அலுவலகங்களிலும் உடல் வெப்பநிலை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோட்ட மேலாளர் கண்ணன், மாநகராட்சி சுகாதார அலுவலர் அருண்குமார், வ.உ.சி. துறைமுக மருத்துவமனை மருத்துவர் பிரவீண், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் மற்றும் அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர். யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: இதனிடையே தூத்துக்குடி மத்திய தொழில்பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த திருவாரூரைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க வீரர், மேல் பயிற்சிக்காக அசாம் மாநிலம் சென்றுவிட்டு கடந்த 14ம்தேதி தூத்துக்குடி திரும்பியபோது சளி, காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து கடந்த 17ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்த மாதிரி எடுத்து சோதனையிட்டதில் டெங்கு தாக்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் இம்மாதிரி நெல்லையில் இயங்கும் மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதனிடையே தீவிர சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை சீரானதை அடுத்து வீடு திரும்பினார். இதே போல் கோவில்பட்டி- சாத்தூர் மெயின்ரோட்டில் இயங்கும் தனியார் சோலார் கம்பெனியில் வேலைபார்த்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுமுறைக்கு ஒடிசாவு சென்றுவிட்டு ரயிலில் திரும்பியபோதும் காய்ச்சல், சளி, இருமலால் சிரமப்பட்டார். கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது ரத்த மாதிரியும் நெல்லையில் இயங்கும் மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவருக்கு காய்ச்சல் இருந்துவருவதால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கலெக்டர் சந்தீப் நந்தூரி மேலும் கூறுகையில், ‘‘நமது மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 48 பேர் சுகாதாரத்துறை மருத்துவர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை அவர்களுக்கு கொரோனா தொற்றுநோய் பாதிப்பு ஏதும் இல்லை. கொரோனா தொற்று ஏற்பட்டால் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை அழைத்து செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் முகமூடி, சோப்பு, கிருமிநாசினி, ஆகியவற்றை தயாரிப்பதற்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.