ஸ்பிக்நகர், மார்ச் 20: கோடை போல் வெயில் கொளுத்தி வருவதாலும், கொரோனா வைரஸ் தடுப்புக்கு பயன்படுவதாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் எலுமிச்சை பழத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னரே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை போல் வெயில் கொளுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் இதன் தாக்கம் குறைந்தபாடில்லை. பொதுவாக வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட குளிர்ச்சியை ஏற்படுத்தும் பானங்களில் எலுமிச்சை சாறு முதன்மையாகத் திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரையில் உள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் எலுமிச்சை பழம் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதனால் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் வரை உச்சத்தில் இருந்த எலுமிச்சை விலை கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் திடீரென சரிந்தது. கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. ஆனால், தற்போது கோடை போல் வெயில் கொளுத்தி வருவதோடு எலுமிச்சையின் தேவை அதிகரித்துவிட்டதால் அதன் விலையில் தற்போது உயர்வு ஏற்பட்டுள்ளது.