நெல்லை, மார்ச் 20: நெல்லை அருகே தச்சநல்லூர் உலகம்மன்கோவில் வடக்கு தெருவில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த இரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம், கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி லாரிகள் மூலமும் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்காததால் குடிநீருக்காக அப்பகுதி பொதுமக்கள் திண்டாடி வந்தனர். சீரான குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்தும், லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்புலிகள் அமைப்பு மாடசாமி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் தச்சநல்லூரில் உள்ள வார்டு அலகு அலுவலகத்தை நேற்று காலை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.