சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல் கொரோனா நோய்தொற்று குறித்து கண்காணித்து 24 மணி நேரமும் தகவல் தர 4 குழுக்கள் அமைப்பு

பெரம்பலூர், மார்ச் 20: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தொடர்பான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு 24 மணி நேரமும் தகவல் தர தாலுகா அளவில் துணை கலெக்டர்கள் தலைமையிலான 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டு வருகின்றன. பொதுமக்களிடையே கைகழுவுதல் உள்ளிட்ட பல்வேறு நோய் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிக்கடி கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிகளவில் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் வரும் 31ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அனைத்து துறைகளிடமிருந்து சேகரித்து அதன் தகவல்களை கலெக்டருக்கு 24 மணி நேரமும் தெரிவிக்கும் பொருட்டு தாலுகா அளவில் துணை கலெக்டர்கள் தலைமையில் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் வேப்பந்தட்டை தாலுகாவுக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர், குன்னம் தாலுகாவுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், பெரம்பலூர் தாலுகாவுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், ஆலத்தூர் தாலுகாவுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பற்றாளர் அலுவலர்கள் சம்மந்தப்பட்ட தாலுகாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவத்துறை அலுவலர்களுடன் தொடர்பில் இருந்து கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை சேகரித்து கலெக்டருக்கு வழங்குவர். எவருக்கேனும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்படும் பட்சத்தில் அந்நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் குறுவட்ட அளவில் கான்டேக்ட் ட்ரேசிங் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: