மயிலாடுதுறை, மார்ச் 20: மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் காவிரியில் திருப்பி விடப்பட்டது. நகராட்சி அதிகாரிகள் இந்த செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை நகர் ரயில்வே சந்திப்பு தெரு வழியாக செல்லும் பாதை குறுக்கே பழங்காவிரி செல்கிறது. அதற்காக கட்டப்பட்ட பாலத்தின்கீழ் மயிலாடுதுறை பாதாள சாக்கடை குழாய் செல்கிறது. இந்த குழாய் கடந்த 3 மாதத்திற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. அதை இதுநாள்வரை சரிசெய்யவில்லை. இதுகுறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கனகசுந்தரம் மற்றும் வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அப்பகுதி மக்கள் பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் வெறியேறும் பகுதியை பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்கறிஞர் கனகசுந்தரம் கூறுகையில், பழங்காவிரியில் அதிக ஆக்கிரமிப்பு உள்ளதாக நாங்கள் அதற்காக போராடி வரும் நிலையில் தற்பொழுது பாதாள சாக்கடை குழாய் உடைக்கப்பட்டு அதிலிருந்து கழிவுநீர் பழங்காவிரி ஆற்றில் விடப்படுவது கண்டிக்கத்தக்கது.