கறம்பக்குடி, மார்ச் 20: கறம்பக்குடி அருகே மின் கசிவின் காரணமாக விவசாயி வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குழந்திரான்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். விவசாயி. நேற்று திடீரென இவரது வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் உடனடியாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர்(பொறுப்பு) ரஜினி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். ஆனால் அதற்குள் கூரை வீடு முழுவதும் எரிந்து சேதமாகி விட்டது.