மண்ணச்சநல்லூர், மார்ச் 20: மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடைபெறவிருந்த தேரோட்டத்தில் வடம் பிடிப்பு இல்லாமல் தேர் நிலைத்தேராக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. ரங்கம் ரங்கநாதர் கோயிலின் உப கோயில்களில் ஒன்று திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெற்று வரும் தேரோட்டம் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 12ம் தேதி தொடங்கியது. விழாவின் 3ம் நாள் திருவெள்ளறை பெருமாளுக்கு ரங்கத்தில் கொள்ளிடக் கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. திருவிழாவின் அடுத்தடுத்த நாட்களில் பெருமாள் கற்பக விருட்சம், அனுமந்த வாகனம், கருட வாகனம், ஹம்ச வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது.