பஸ் நிலையம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பை

விருதுநகர், மார்ச் 20: விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதாரக்கேடு அபாயம் நிலவுகிறது. விருதுநகர் நகராட்சியை குப்பையில்லா நகராட்சியாக மாற்றும் வகையில் நகரில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டன.

நகரின் அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் பெற்று வருகின்றனர். மாலை மற்றும் இரவு நேரங்களில் கடை வீதிகளில் ஒவ்வொரு கடைகளிலும் இருந்து குப்பைகள் பெறப்பட்டு வருகின்றன. வாறுகால் மற்றும் பொது இடங்களில் குப்பைகள் கொட்டினால் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழைய பஸ் நிலையம் அருகில் வீரபத்திரன் தெருவிற்கு செல்லும் பாதையில் குப்பை குவியல் பல நாட்களாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. தெருவிற்கு செல்லும் வழியில் குப்பை குவிந்து கிடப்பதால் வீரபத்திரன் தெரு, சாமியார் கிணற்றுத் தெரு குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக குப்பைகளை முழுமையாக அகற்றி, கிருமி நாசிகளை தெளிக்க வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: