தலையில் கல்லை போட்டு பிரபல ரவுடி வெட்டிக்கொலை * மது அருந்தியபோது தகராறு

சிவகாசி, மார்ச் 20: சிவகாசி அருகே திருத்தங்கல் காவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் பொங்கல் (எ) முத்துக்குமார்(29), பிரபல ரவுடி. இவர் மீது இரண்டு கொலை வழக்கு உள்பட 15க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கேரளாவில் வேலை பார்த்த முத்துக்குமார், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருத்தங்கல் வந்தார். பிளஸ் 2 மாணவனை தாக்கியதாக முத்துக்குமாரை கைது செய்து விருதுநகர் சப் ஜெயிலில் போலீசார் அடைத்தனர். சில நாட்களுக்கு முன் முத்துக்குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருத்தங்கல்-ஆலமரத்துபட்டி ரோடு வண்ணார் தொட்டியில் முத்துக்குமார் தனது நண்பர் சுந்தரபூபதிராஜா உள்பட சிலருடன் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் முத்துக்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கல்லை தூக்கி போட்டும் கொலை செய்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சிவகாசி டிஎஸ்பி பிரபாகரன், திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்தனர். முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிந்து, திருத்தங்கல் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் சுந்தரபூபதிராஜா(21), விஜய்ஆனந்த் மகன் பாலகிருஷ்ணன்(20), முத்துமாரிநகர் தெய்வம் மகன் மாயக்கண்ணன்(20), செல்லியாரம்மன்கோயில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் அர்ஜூன்குமார்(22) மற்றும் முனியசாமி மகன் தீபக்குமார்(22) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: