வாலிபர் மீது தாக்கிய 2 பேர் கைது

பெரியகுளம், மார்ச் 20: பெரியகுளம் தென்கரையில் உள்ள பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (22). இவர், அழகர்சாமிபுரத்தை சேர்ந்த சூர்யா (21) என்பவரிடம் ரூ.ஆயிரம் கடனாக பெற்றார். இந்த கடனை பால்பாண்டி திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தென்கரை, கருப்பணசாமி கோவில் அருகே பால்பாண்டி சென்ற போது சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் புவனேஸ்வரன் (20), பாலு, பிரசாந்த் (25), தரன் ஆகியோர் சேர்ந்து பால்பாண்டியை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த பால்பாண்டி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து புவனேஸ்வரன், பிரசாந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்ற 3 பேர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: