பராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம் கருகும் மரங்கள் புதிதாக மரக்கன்று நட வலியுறுத்தல்

சாயல்குடி, மார்ச் 20:  சாயல்குடி கடற்கரை பகுதிகளில் மரங்கள் போதிய பராமரிப்பு இன்றி பட்டு போய் வருவதால், புதிய மரக்கன்றுகளை நடவேண்டும் என மீனவ கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சாயல்குடி அருகே உள்ள ரோச்மா நகர் முதல் சின்ன ஏர்வாடி வரையிலான சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாயல்குடி கடல்கரை எல்கை அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

கடற்கரைக்கு மிக அருகில் குடியிருப்பு வீடுகள் இருப்பதால், மண் அரிமானம் மற்றும் கடற்கரை மண் தடுத்தல், காற்றிற்கு மண் பறக்காமல் தடுத்தல், சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தை தடுக்கும் நோக்கத்திலும், பாதுகாப்பு நலனுக்காவும், இயற்கையை பாதுகாக்கவும், இப்பகுதியில் தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள பாதுகாப்பு மையம் சார்பில் நூற்றுக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளது. கடற்கரை ஓரங்களில் மணல் பரப்பில் வறட்சியை தாங்க கூடிய வகை மரங்கள்,  பனைமரம், உப்புகாற்றிற்கு பாதிப்படையாத மரங்களான சவுக்கு, ஆர்.எஸ்.பதி, நாட்டு கருவேலமரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. சுமார் 20 வருடங்களுக்கு முன் வளர்க்கப்பட்ட நாட்டு கருவேலமரங்களும் சுமார் 7 வருடங்களுக்கு முன் நடப்பட்ட சவுக்கு மரங்கள், 50 வருடங்களுக்கு முன் வளர்க்கப்பட்ட ஆர்.எஸ்.பதி மரங்கள் நன்றாக வளர்ந்து, மர பயன்பாட்டிற்கு உகந்த நிலையில் உள்ளது.

ஆனால் அரசு அலுவலர்களின் மெத்தன போக்கால் காலம் பார்த்து ஏலம் விடாததால், மரங்கள் தொடர் வறட்சிக்கு தாக்கு பிடிக்க முடியாமல், சேதமடைந்து, கீழே சாய்ந்து கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல் மரங்களை வெட்டி கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்று கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கடுகுசந்தை தரவைகாடுகளிலும் வளர்க்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.பதி மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி கடத்தி வருகின்றனர். எனவே மரம் இல்லாத பகுதிகள் உள்ளிட்ட கடற்கரை, கடற்கரை சாலையோரங்களில் புதிய மரக்கன்றுகளை நடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இப்பகுதி கடற்கரையோரங்களில் கிராமங்களின் பாதுகாப்பிற்காக வனத்துறையால் வளர்க்கப்பட்ட மரங்கள் போதிய பாதுகாப்பு இன்றி கிடப்பதால், சமூக விரோத கும்பல் கூலி ஆட்களை கொண்டு, மரங்களை ஆங்காங்கே வெட்டி, இரவு நேரங்களில் வண்டிகளில் ஏற்றி கடத்தி செல்கின்றனர். வனத்துறை அலுவலர்கள், வனக்காப்பாளர்கள் முறையாக மரங்களை பாதுகாப்பது கிடையாது. ரோந்து பணி செல்வதும் கிடையாது.

இதனால் மரம் கடத்தல் ஜோராக நடந்து வருகிறது. மேலும் மாரியூர், கீழமுந்தல், மேலமுந்தல், வாலிநோக்கம், ஐந்து ஏக்கர், ரோச்மா நகர், ஒப்பிலான் கடற்கரையோரங்களில் நூற்றுக்கணக்கான சவுக்குமரங்கள் பட்டுபோய் நிற்கிறது. எனவே வனத்துறையினர் இப்பகுதியில் புதிய மரக்கன்றுகளை நடவேண்டும். இருக்கின்ற மரங்களை பாதுகாத்து, கடற்கரை கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: