பரமக்குடி நகராட்சி சார்பில் பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு

பரமக்குடி, மார்ச் 20:  பரமக்குடி நகராட்சி சார்பாக மக்கள் கூடும் பொது இடங்களில் கொரோனா வைரசை தடுப்பதற்கான கிருமி நாசினி  தெளிக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு உத்தரவின்பேரில் கலெக்டர் அறிவுறுத்தலின்படி நகராட்சி ஆணையாளர் வீரமுத்து குமார் தலைமையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அப்பகுதி முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் கூடும் பகுதிகளான பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நகர் பகுதிக்குள் வரும் அனைத்து பேருந்துகளிலும் தொடர்ந்து கிருமிகளை அழிக்க கூடிய மருந்துகளை தெளித்து வருகின்றனர். இந்த மருந்தில் 5 சதவீதம் லைசாலுடன் ஒரு சதவீதம் ஹைப்போ குளோரைட் கலந்து தெளித்து வருகின்றனர். மேலும் நகரில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு நிறுவனங்கள், குடியிருப்பு நலச்சங்கம் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கை கழுவும் முறைகளை பற்றியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் சண்முகவேல், சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து சரவணன், தினேஷ்,பாண்டி உள்பட நகராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: