தொழில் முனைவோரை கண்டறிந்து பயிற்சிகள் அளிக்க அறிவுறுத்தல்

சிவகங்கை, மார்ச் 20: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஊரக புத்தாக்க செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. தலைமை வகித்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது: மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 124 ஊராட்சிகளில் களஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு பணி நடத்த வேண்டும்.

இதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து தேவையான தொழிற்பயிற்சிகள் வழங்கி சுயதொழில் துவங்குவதற்கு வங்கிக்கடன் பெறுவதற்கு உதவிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும் தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கி வங்கிக் கடனுதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் பழனீஸ்வரி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் முருகேசன், மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: