திருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்

திருமங்கலம், மார்ச் 20: மதுரை திருமங்கலம் அடுத்துள்ள எஸ்.பி. நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தனபாண்டி(45). விவசாயி. இவரது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது ஆடுகள் நூற்றுக்கும் மேற்பட்டவைகளை தொழுவத்தில் அடைத்துவைத்துவிட்டு தூங்க சென்றுள்ளார். திடீரென நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சப்தம் கேட்கவே சந்தனபாண்டி குடும்பத்தினர் தொழுவத்தில் சென்றுபார்த்தனர்.

அப்போது மூன்றுக்கும் மேற்பட்ட நாய்கள், ஆடுகளை கடித்து குதறியுள்ளன.

இதனைக் கண்ட சந்தனபாண்டி, நாய்களை விரட்டிவிட்டு தொழுவத்திற்குள் சென்ற பார்த்தபோது ஒரு செம்மறியாடு உயிரிழந்து கிடந்தது. மேலும் மூன்று ஆடுகள் படுகாயமடைந்த நிலையில் இருந்தன. அவற்றை மீட்டு சிவரக்கோட்டை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சையளித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், சிவரக்கோட்டை, எஸ்.பி.நத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. உணவு கிடைக்காத நிலையில் இவை இரவு வேளைகளில் ஆடு, கோழிகளை தாக்கி உண்ணத்துவங்கியுள்ளன. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: