வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

மதுரை, மார்ச் 20: மதுரையில் ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வை வட்டார போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்றது. மதுரை பழங்காநத்தம் ஆட்டோ ஸ்டாண்டில் டிரைவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது. மதுரை வட்டார போக்குவரத்து துறை மதுரை மண்டல இணை கமிஷனர் ரவிச்சந்திரன், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி ஆகியோர் ஆலோசனைப்படி பிரேக் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்ராம் மற்றும் ஆர்டிஓ அலுவலக ஊழியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஆட்டோவை வீட்டில் இருந்து காலையில் எடுக்கும் முன்பாக சுத்தமாக கழுவி கிருமி நாசினி தெளிக்கவேண்டும். டிரைவர்கள் முக கவசம் அணிய வேண்டும். அது கிடைக்காவிட்டால் கர்சீப்பை கட்டிக்கொள்ளவேண்டும். பயணிகளிடம் செல்லும் இடங்களை கேட்டறிந்த பின்னர் அவர்களுக்கு சானிடைசர் கொடுத்து கைகளை கழுவிய பின்பு ஆட்டோவில் ஏற்றவேண்டும். அதே போல் ஆட்டோவை இரவில் நிறுத்தும் போதும் சுத்தப்படுத்தவேண்டும் என்று ஆலோசனை வழங்கினர். பின்னர் அனைத்து ஆட்டோக்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரேக் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறுகையில், ‘‘போக்குவரத்து துறை பொதுமக்களோடு அதிக இணைப்பை கொண்ட துறையாகும். எனவே, கொரோனா குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். தினமும் ஒவ்வொரு டாக்சி, வேன், பஸ் போன்ற பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

Related Stories: