ஒட்டன்சத்திரம், மார்ச் 20: ஒட்டன்சத்திரத்தில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழ்புலிகள் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் க.சின்னக்கருப்பன் தலைமை வகித்தார். மத்திய மண்டல செயலாளர் திருவாணன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்துகொண்டு பேசுகையில், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அனைத்து மதத்தினரும் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது தமிழகத்தில் மறைமுகமாக பா.ஜ.க ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தினால் 50 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்படுவர். ஹிட்லர் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை தற்போது மோடி கொண்டுவந்திருக்கிறார். தமிழ்புலிகள் கட்சி இந்த ஒரு கூட்டமல்ல, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பபெறும் வரை போராட்டம் தொடரும்’ என்றார்.